வல்லாரையின் மருத்துவ பயன்கள்

VYM-Vallarai-1200x630.jpg

உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி போன்ற பல பெயர்கள் வல்லாரைக்கு உண்டு. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெறி கட்டி, கண்டமாலை, பைத்தியம், சூதக் கட்டு, மூளை வளர்ச்சி, சுறுசுறுப்புடன் செயல்பட வல்லாரை மிகவும் பயன்படுகிறது. வல்லாரைக்கீரையை எப்படி பயன்படுத்தி நலம் பெறலாம் என்று இங்கே சில வழிமுறைகளை காணலாம்.

வல்லாரையை பயன்படுத்தும் சில வழிமுறைகளும், அதன் பயன்களும்

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48லிருந்து 96 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும். இப்படி தொடர்ந்தார் போல சாப்பிட்டு வந்தால் மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கூடும். இதனை தொடர்ந்து ஒரு ஆண்டு சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை, தூதுவளை இரண்டையும் சம அளவு இடித்து பிழிந்த சாற்றை 5 மில்லி சாப்பிடவும். நோய் ஏற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல், சளி போன்றவை குணமாகும்.

வல்லாரை இலைச்சாறு நாளொன்றுக்கு 5 மிலி காலை, மாலை சாப்பிட்டு வரவும். இப்படி சாப்பிட்டு வந்தால் யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமாலை போன்றவை குணமாகும். ஆமணக்கெண்ணெயில் வல்லாரை இலைகளை வதக்கி மேலே பற்று போட வேண்டும். இப்படி செய்வதால் கட்டிகளும் கரையும், அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு இவைகளை சமன் கூட்டி அரைத்து குண்டுமணி அளவு மாத்திரை செய்து காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காய்ச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டைக்காய் அளவு காலை மட்டும் தயிரில் எடுத்துக்கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்திய அரிசித்திப்பிலி மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும், நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன்படும். இசைத்துறையில் உள்ள அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.

பெண்களுக்கு சிலசமயம் மாதவிலக்கு தள்ளிப்போகும் இதனால் இடுப்பும், அடிவயிறும் கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை, உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் பெண்களுக்கான இந்த குறைபாடு குணமாகும். உடனே விலக்கு ஏற்படும்.

வல்லாரை இலையை உலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து இரண்டையும் சம அளவில் சேர்த்து 5 லிருந்து 10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கு ஏற்ப 6 முதல் 12 மாதங்கள் சாப்பிட வேண்டும். பத்தியமாக மோர் அல்லது பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம், இனிப்பு போன்றவற்றை சேர்க்கக்கூடாது. புலால், புகை, மது, இவைகளையும் கொள்ளக்கூடாது. இப்படி செய்து வந்தால் குட்டம் குணமாகிவிடும்.