விரதமே மகத்தான மருத்துவம் – நம்மாழ்வார்

VYM-Viratham.jpg

இயற்கை மீதான பேரன்பும், உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது, தோட்ட வேலை, எழுத்துப் பணி, மேடைப்பேச்சு என ஒரு நாளைக்கு 16 மணி நேரம் பம்பரமாகச் சுழன்றவர் நம்மாழ்வார்.

“எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலேயே உணவே மருந்து, மருந்தே உணவு என்று திருமூலர் சொல்லிட்டு போய்விட்டார். அந்த அற்புதமான வாக்கை ஆராதிக்கத் தவறியவர்கள் தான் எண் சாண் உடம்பில் எண்ண முடியாத வியாதிகளோடு அலையுறாங்க. வாழ்க்கையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நோயே வராமல் வாழ்வது. இரண்டாவது நோய் வந்த பின் வருந்தியபடியே வாழ்வது. முதல் வகையில் இணைந்துவிட்டால் நமக்கு இன்னல்கள் இருக்காது” – இது நம்மாழ்வாரின் வரிகள். உணவே மருந்து என்று வாழ்ந்து காட்டிய நம்மாழ்வார் விரதம் என்னும் உண்ணாநோன்பை கடைபிடித்தே நோய் நொடியில்லாமல் சுறுசுறுப்பாக வாழ்ந்து காட்டியவர்.

உணவை எப்போது சாப்பிட வேண்டும் என்று கூறும் திருக்குறள்

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”

மேற்கண்ட குறளிலேயே நோய் அண்டாமல் வாழ்வதற்கு வழி சொல்லப்பட்டு இருக்கிறது. உண்ட உணவு சீரணமாகிவிட்டதை உணர்ந்து, அறிந்து, அதன் பிறகே உண்டால் அந்த உடம்புக்கு மருந்து என்ற ஒன்றே தேவை இல்லை என்பதே இந்த குரல் சொல்லும் உண்மை.

எதை எப்போது எப்படி உண்ண வேண்டும் என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. நாம் உண்ணும்போது முதலில் உணவை விழுங்குகிறோம். ஆனால் அப்படி விழுங்கக்கூடாது. பற்களால் நன்றாக அரைத்து கூழாக்கி உமிழ்நீரோடு சேர்த்து உள்ளே தள்ளவேண்டும். இதைத்தான் “நொறுங்கத் தின்றால் நோய் தீரும்” என்ற பழமொழி சொல்லுகிறது. அளவு கடந்து உணவு உண்பவர்கள் நோய்களை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். நாம் உண்ணும் உணவுக் கழிவுகள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் கொஞ்சம் கொஞ்சமாக தேங்குகிறது. இதன் அளவு அதிகரிக்கும்போது நோய் உண்டாகிறது சரி அதை எப்படிக் களைவது? இதற்கான சுலபமான வழி உண்ணாநோன்பு. இதைதான் “விரதம்” என்ற பெயரில் நமது முன்னோர்கள் கடைபிடித்தார்கள்.

தெரபியூட்டிக் ஃபாஸ்டிங் என்னும் உண்ணாநோன்பு

“நோயினால் படுப்பதென்ன கண்ண பரமாத்மா,
நோன்பினால் உயிர்ப்பது என்ன கண்ண பரமாத்மா”

எனப் பாடினார்களே அந்த நோன்பு தான் உண்ணாநோன்பு. இறக்கும் தருவாயில் இருப்பவனை கூட உயிர்த்தெழச் செய்யும் சக்தி உண்ணா நோன்பிற்கு இருக்கிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் “தெரபியூட்டிக் ஃபாஸ்டிங்” (Therapeutic Fasting) என்று சொல்கிறார்கள். சர்வதேச அளவில் இந்தச் சிகிச்சை பிரபலமாகி வருகிறது. உண்ணாநோன்பு இருக்கும்போது நம் உடலுக்குள் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் தன்னாலே வெளியேறி விடுகின்றன. உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும்.

உணவு குறித்து நம்மாழ்வாரின் சில கூற்றுகள்

“நான் 35 வயதில் கண்ணாடி அணிந்தேன், 60 வயதில் அதை அகற்றிவிட்டேன். இப்போது கண்ணாடியைப் பயன்படுத்துவதே இல்லை. பொடி எழுத்துக்களைக் கூட என்னால் துல்லியமாக வாசிக்க முடியும். இதற்கு காரணம் எனது உணவு பழக்கவழக்கங்கள் தான்”, என்று நமக்கு வியப்பான ஒரு உண்மையை சொல்கிறார் நம்மாழ்வார்.

இயற்கை நமக்கு கொடுத்த அருட்கொடை மூலிகைகள். நாம் பயிர் செய்யாமலேயே நமக்கான உணவாக சில மூலிகைகளை இயற்கை உற்பத்தி செய்கிறது. உதாரணமாக, பிரண்டைத் துவையல் செய்து சாதத்தில் குழம்புக்கு பதிலாக பிசைந்து உண்ணலாம். தூதுவளை, முசுமுசுக்கை இலைகளைச் சேர்த்து ரசம் வைத்து உண்டால் நாள்பட்ட சளி தீரும். வாய்ப்புண்ணை ஆற்ற வெட்டுக்காயப் பச்சிலை. அனைத்துக்கும் சிறந்த ஆவாரை, துளசி என மூலிகைகளின் அதிசய ஆற்றல் கொஞ்சநஞ்சம் அல்ல. நம்மை சுற்றி வளர்ந்து கிடக்கும் எண்ணில்லா மூலிகைகளை நாம் சரியாக பயன்படுத்தினாலே நோய்கள் காணாமல் போய்விடும் என்று நம்மாழ்வார் கூறுகிறார்.

உடலின் மகத்துவம் பற்றியும், யோகாவின் சிறப்பை பற்றியும் நம்மாழ்வார் கூறியவை

இயற்கை ஒருபோதும் தவறு செய்வதில்லை. உடல் ஒருபோதும் தன் கடமையை நிறுத்துவதில்லை. பசி வந்தால் உணவு, தாகம் எடுத்தால் தண்ணீர், சோர்வு வந்தால் உறக்கம் என உடல் சரியான சமிக்ஞைகளை நமக்கு கொடுத்தவண்ணம் இருக்கிறது. அதன்படி உணவு, உறக்கத்தை நாம் கடைப்பிடித்தாலே உடலுக்கு எந்தவிதமான சிக்கலும் வராது. பலர் வலிக்காக மாத்திரை மருந்துகளை உட்கொள்கிறார்கள். வலி என்பது உடம்பு தன் உள்ளே இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும் முயற்சி அதைத் தடுக்கக்கூடாது. 50 வயது வரை உடம்புதான் உன்னதம் என நினைக்கும் மனது அதற்குப் பிறகு ஆன்மாவை ஆராதிக்கிறது. ஆன்மா இந்த உடம்புக்குள்ளே தான் இருக்கிறது. அதனால் உடலைப் பராமரிப்பதும் அவசியம் ஆகும் என்று நம்மாழ்வார் நமக்கு நினைவூட்டுகிறார். இந்த இரண்டையும் ஒரே இடத்தில் பராமரிக்க உதவுவது யோகா என்பதை அழுத்தமாக பதிவு செயகிறார். தினமும் காலை நடைப்பயிற்சியும், மூச்சுப் பயிற்சிக்கு யோகா செய்வதாக நமக்கு அவர் கூறுகிறார்.

சரியாக பழக்கவழக்கங்களும், உணவு முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும்இருந்தாலே நோய்க்கு நோ என்ட்ரி போட்டுவிடலாம் என சொல்லும் நம்மாழ்வார் இறுதியாக கணியன் பூங்குன்றனார் சொன்ன தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற வரியை குறிப்பிடுகிறார். நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக் கூடியது இந்த சொற்கள் என்றும், அந்த வரிகளை மனதில் ஏற்று, இயற்கையை வணங்கி, உடலை ஆராதிக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வின் சிறப்புக்கு குறைவே இருக்காது என்று கூறி நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார் நம்மாழ்வார்.